×

54 நாட்கள் இருட்டு அறையில் இருந்தேன்… அந்த நபரின் கண்கள் பலாத்கார அச்சத்தை தந்தது: விடுவிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி

ஜெருசலேம்: யாருடனும் பேச விடாமல் 54 நாட்கள் என்னை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தனர் என்று விடுவிக்கப்பட்ட இஸ்ரேல்-பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாட்டூ பெண் கலைஞர் மியா ஸ்கெம் தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் என சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். 3 மாதங்களாக நடந்து வரும் இருநாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்ற 240 பேரில், இஸ்ரேல்-பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 21 வயதான பெண் டாட்டூகலைஞர் மியா ஸ்கெம் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் 54 நாட்களாக இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். என்னைத் தொடர்ந்து கண்காணித்தனர். அங்கு பேசுவதற்கு அனுமதி இல்லை. யாரையும் பார்க்கவும் முடியாது. எதையும் கேட்கவும் முடியாது. என்னை அடைத்து வைத்திருந்த நபரின் அறையில் தான் நான் இருந்தேன். அந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் அவரது மனைவி, குழந்தைகள் இருந்தனர். அதனால்தான் அந்த நபர், என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை.

எந்த நேரத்திலும் கொல்லப்படுவேன் என்ற மரண பயம் எனக்கு இருந்தது. என்னை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அந்தநபரின் கண்களாலேயே நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவேன் என்ற படுமோசமான உணர்வு எனக்கு இருந்தது. கண்ணில் எப்போதும் எனக்கு சாவு பயம் இருந்தது. 54 நாட்களும் பயத்துடனேயே அங்கு இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னை சிறைபிடித்த நபர், தன்னுடைய மனைவியை காதலிக்கவில்லை என்று என்னிடம் சொன்னார். ஒருவழியாக நான் விடுவிக்கப்பட்டேன். வெளியே தப்பி வந்தது கனவு போல இருக்கிறது’ என்றார்.

The post 54 நாட்கள் இருட்டு அறையில் இருந்தேன்… அந்த நபரின் கண்கள் பலாத்கார அச்சத்தை தந்தது: விடுவிக்கப்பட்ட பெண் கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : JERUSALEM ,Mia Schem ,Hamas ,Gaza ,
× RELATED காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர...